சவுதியின் ரியாத் மாகாணம் தவாட்மி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வாகன தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை தீவனம் ஏற்றப்பட்டிருந்த ஒரு லாரி திடீரென தீப்பற்றியது. இந்நிலையில், தீப்பற்றிய அந்த லாரி வெடித்து பேரழிவு ஏற்படும் அபாயத்தை உணர்ந்த மஹர் ஃபஹத் அல் தல்பாஹி என்ற நபர், தன்னுடைய உயிரையும் கருதாமல் அந்த லாரியில் ஏறி அதை பெட்ரோல் நிலையத்திலிருந்து தூரத்திற்குப் ஓட்டிச் சென்றார்.

இந்த தைரியமான செயல் வீடியோவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. லாரியின் ஓட்டுநர் அச்சத்தில் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.

“>

 

இந்த சம்பவத்தில் மஹர் ஃபஹத்தின் முகத்தில் 3-ஆம் நிலை தீக்காயமும், கைகளிலும் கால்களிலும் 2-ஆம் நிலை தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், நலமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது செயலால் பக்கத்தில்  இருந்த மக்கள், பெட்ரோல் பம்ப், ரயில்வே நிலையம் உள்ளிட்டவை பெரும் பேரழிவில் இருந்து தப்பியுள்ளன. அவரது துணிச்சலை அனைவரும் புகழ்ந்து வர, ரியாத் துணை ஆளுநர் இளவரசர் முகமது பின் அப்துல்ரஹ்மான் நேரில் சென்று மஹர் ஃபஹத்தை பாராட்டி, சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குமாறு அதிகாரிகளை உத்தரவிட்டார்.