சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூரில் கட்டிட வேலை பார்க்கும் அழகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகனும், கிருத்தி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அழகேசன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இரு சக்கர வாகனத்தில் பண்ணவாடியில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் ராமன் நகர் அருகே சென்ற போது அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அழகேசன் இளமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து காயமடைந்த இரண்டு குழந்தைகளையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.