
சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச திரு ஸ்டாலின் அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று EPS விமர்சித்துள்ளார்.
ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார்கள். அப்போதுதான் பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல் தடுத்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள அரிசி கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு ஏழு தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, “ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, “சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்” என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச திரு ஸ்டாலின் அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? “காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை” என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.