தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், அவந்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 20 வயது தினக்கூலித் தொழிலாளி வசித்து வந்துள்ளார். அவந்திகாவுக்கும் கருப்பசாமிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி குழந்தை இல்லை. கருப்பசாமி கேரளாவில் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார். உறவினரான ராம்குமாருடன் அடிக்கடி வேலை செய்து வந்த நிலையில், அவந்திகாவுக்கும் ராம்குமாருக்கும் இடையே ஏற்பட்ட உறவு, திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது.
இது குறித்து கருப்பசாமி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், இந்த விவகாரம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, ராம்குமார் அவந்திகாவை அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, இருவரும் தனியாக இருந்தனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் திரண்டதால், அவந்திகா ராம்குமாரை மாடியில் உள்ள ஒரு அறையில் ஒளிந்து கொள்ளச் சொன்னாள்.
அதன் பிறகு மன உளைச்சலில் ராம்குமாரை மாடிக்கு அனுப்பிய பின், தரைத்தள அறையில் தனது சேலையை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் கழித்து, கிராம மக்கள் கதவை திறந்து, அவரது உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் ராம்குமார் மாடியில் இருந்தது தெரியவந்தது. சின்னமனூரில் இருந்து உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவந்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அவந்திகாவின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
