போஸ்னியா ஹெர்ச்கோவினா எனும் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள க்ரடகாக் நகரத்தில் வசித்து வந்தவர் நெர்மின் சுலெமனோவிக். உடற்பயிற்சியாளரான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நெர்மின் நேற்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு கொலையை நேரில் பார்ப்பீர்கள் என குறிப்பிட்டு நேரலையை தொடங்கியுள்ளார். இதனால் அவரது பாலோவர்ஸ் பலர் அதிர்ச்சியுடன் காணொளியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நெர்மின் துப்பாக்கியால் பெண் ஒருவரது நெற்றியில் வைத்து சுட்டுக்கொலை செய்தார்.

இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை தேடி சென்ற போது அவர்களிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த நெர்மின் செல்லும் வழியில் ஒரு நபரையும் அவரது மகனையும் சுட்டுக்கொலை செய்துள்ளார். அதனையும் அந்த நேரலை காணொளியில் பதிவு செய்ததோடு இருவரை சுட்டு கொலை செய்து விட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார். இறுதியாக காவல்துறையினர் நெர்மினை நெருங்கும் சமயத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

12,000 பேர் இந்த நேரலை காணொளியை பார்த்த நிலையில் 126 பேர் லைக் செய்துள்ளனர். இந்த கொடூர காணொளியை இன்ஸ்டாகிராம் உடனடியாக நீக்கி விட்டது. ஆனாலும் இந்த சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் முதலில் கொலை செய்தது அவரது முன்னாள் மனைவி என தெரியவந்துள்ளது.