கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் வசிக்கும் 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் இருக்கும் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விடுதி ஊழியர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரை நீலிகோணம் பாளையம் ரயில்வே கேட் அருகே சந்திக்க முடிவு செய்தார். அதன்படி விடுதி ஊழியர் அங்கு சென்று அந்த வாலிபரின் வருகைக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான வாலிபர் அங்கு சென்றார்.

அப்போது விடுதி ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரிகமான முறையில் நடந்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் தனது நண்பர்கள் இரண்டு பேரை செல்போன் மூலம் வரவழைத்து விடுதி ஊழியரின் நடவடிக்கையை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மூன்று பேரும் பீர் பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த விடுதி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆலன் சாயா, மோகனசுந்தர், கங்காதரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.