டெல்லியைச் சேர்ந்த நிதித்துறை அதிகாரி மோனிகா ஜசுஜா என்பவர், தனது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். டிசம்பர் 2024-ல் ஒரு நள்ளிரவு நேரத்தில், கடும் குளிரில் தனது தாயாரின் காப்பீட்டு ஆவணங்களை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டிய அவசரத் தேவை அவருக்கு ஏற்பட்டது.
அப்போது ‘பிளிங்கிட்’ (Blinkit) செயலி மூலம் அவர் ஆர்டர் செய்த பிரிண்ட் அவுட்களைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியர், மோனிகாவின் பதற்றத்தைக் கண்டு மிகவும் கனிவாக நடந்து கொண்டார். “மருத்துவமனையில் யாருக்கு உடல்நிலை சரியில்லை? உங்களுக்கு வேறு ஏதேனும் உதவி வேண்டுமா?” என்று அவர் அக்கறையுடன் கேட்டது மோனிகாவை நெகிழச் செய்துள்ளது.

​அந்த இக்கட்டான நேரத்தில் டெலிவரி ஊழியர் காட்டிய மனிதநேயம் மோனிகாவின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவசர வேலையாக அவர் உள்ளே சென்றதால் அன்று சரியாக நன்றி சொல்ல முடியாவிட்டாலும், இன்றும் அந்த மருத்துவமனையைக் கடக்கும்போதெல்லாம் அந்த ஊழியரை நினைத்து மனதார வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. “தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், ஒரு மனிதன் சக மனிதனிடம் காட்டும் அன்பிற்கு ஈடாகாது” எனப் பலரும் இந்த ஊழியரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.