ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம், தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் புதிய நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தப் போவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் புதிய டிஜிட்டல் முறையைக் கொண்டு வர கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.

​இது குறித்துப் பேசிய புஸ்ஸி ஆனந்த், “இன்னும் ஒரு 10, 15 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாருடைய தொகுதிகளிலும் டிஜிட்டல் முறையில் உங்களுக்கு கியூஆர் கோடு (QR Code) கொடுத்து விடுவோம்” என்றார். மக்களுக்கு ஏதேனும் புகார்கள் அல்லது தேவைகள் இருந்தால், அந்த கியூஆர் கோடு மூலம் உடனடியாகத் தெரிவிக்கலாம் என்றும், அது தங்களுக்கு உடனே தெரியவந்து அடுத்த கணமே சரி செய்யப்படும் என்றும் இந்த அதிரடித் திட்டம் குறித்து அவர் விவரித்துள்ளார்.