தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர்கள் மற்றும் சில தொழில் முறை அல்லாத உளவியலாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஒரு வகையான இசை ஒலிக்கப்பட்டு மாணவ மாணவிகளின் கண்களை மூடச் சொல்லி அவர்களை மெஸ்மரிசம் என்ற நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

அப்போது பெரும்பாலான மாணவர்கள் மனரீதியாக தளர்ந்து கதறி அழுகிறார்கள். இப்படியான நிலையில் சிலர் நம்பிக்கை இழந்து துவளும் நிலை உள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் பள்ளிகளில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவியருக்கு ஆலோசனை மற்றும் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்பு நிகழ்ச்சியின் தன்மை மற்றும் பங்கேற்கும் விருந்தினர்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதே சமயம் மாணவர்களின் கல்வியை, எதிர்காலத்தை, தன்னம்பிக்கையை மற்றும் மன ரீதியான துணிச்சலை வளர்க்கும் நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும் எனவும் அதற்குரிய ஆளுமைகளை மட்டுமே பங்கேற்க வைக்க வேண்டும் எனவும் இதற்கான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.