ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வரும் செர்பிய நாட்டை சேர்ந்த லாசர் என்பவர், நகரின் சாலைகள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்யும் பணியில் இறங்கி, பாராட்டைப் பெற்றுள்ளார்.

குடிமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளுக்கு வெளியே குறைந்தது 2 மீட்டர் பகுதியில் சுத்தம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா ஒரு அற்புதமான நாடாக இருந்தாலும், மக்கள் வீடுகளுக்கு வெளியே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுடன் நடக்க மறுக்கிறார்கள் என்ற கவலையை வெளிப்படுத்தினார்.

“இந்திய மக்கள் வீட்டிற்குள் மிகவும் தூய்மையாக இருப்பார்கள். ஆனால் வெளியே உள்ள குப்பைகள், காடுகள், வீதிகளை ‘இது நம்முடையது அல்ல’ என்று புறக்கணிக்கிறார்கள். இதை மாற்றவேண்டும் என்பதற்காக கடந்த 10 நாட்களாக இந்த தூய்மை இயக்கத்தை நடத்தி வருகிறேன்” என லாசர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் தமிழ்நாடு, பெங்களூரு, ரிஷிகேஷ் உள்ளிட்ட நகரங்களிலும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

“>

இதேவேளை, பிரான்சை சேர்ந்த மாடில்டா என்ற பெண், “இந்தியாவை நான் நேசிக்கிறேன். ஆனால் தெருவில் சுத்தம் இல்லாதது வருத்தமாக உள்ளது” என கருத்து தெரிவித்தார். தூய்மையை உறுதி செய்ய ஹரியானா அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்த நிலையில், வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவின் தூய்மைக்காக செயலில் ஈடுபடுவது பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.