சொகுசுக்கும் வேகத்திற்கும் பெயர்போன வந்தே பாரத் ரயிலில், டிக்கெட் இல்லாமல் ஊர் திருவிழா கூட்டம்போல மக்கள் புகுந்த சம்பவம் ரயில்வே துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தச் சிறப்பான தொடக்க விழாவின் போது, ஏராளமான மக்கள் டிக்கெட் இல்லாமலேயே ரயிலுக்குள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.

இது ஏதோ சாதாரண பாசஞ்சர் ரயில் என்பது போல, இருக்கைகளிலும் நடைபாதைகளிலும் மக்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதைப் பார்த்த மற்ற பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள், “சீக்கிரம் இறங்குங்கள், தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டால் வெளியே போக முடியாது” என எச்சரிக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

சிலர் ரயிலைப் பார்த்து ரசிக்க வந்திருந்தாலும், பலர் டிக்கெட் இல்லாமலேயே பயணம் செய்ய முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “பீகாரில் பல கிராமங்களில் சட்டவிரோத ரயில் நிறுத்தங்கள் இருப்பதே இது போன்ற பழக்கத்திற்குக் காரணம்; இதே நிலை நீடித்தால் விமானத்திலும் டிக்கெட் இல்லாமல் ஏறுவார்கள்” என நெட்டிசன்கள் கிண்டலாகவும் கவலையுடனும் பதிவிட்டு வருகின்றனர்.