பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரை யாரோ இருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஆலியா பட் வெளியிட்டுள்ள பதிவில், நான் என்னுடைய வீட்டில் மதிய நேரம் சாதாரணமாக அமர்ந்திருந்த போது யாரோ என்னை கண்காணிப்பதாக உணர்ந்தேன். அப்போது என் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து இரு ஆண்கள் என்னை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இது எந்த உலகில் அனுமதிக்கப்படுகிறது. இது தனிநபர் அத்துமீறல் என்று மும்பை போலீசை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு ஆலியா பட்டுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும் நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், நாங்களும் 2 வருடங்களுக்கு முன்பாக இது தொடர்பாக பேசினோம். நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் எங்களுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டார்கள். இது முற்றிலும் அவமானமான செயல் என்று பதிவிட்டுள்ளார்.