தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.அப்போது தமிழக வெற்றி கழகம் எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காது என்றும் விஜய் தனித்து நின்று தான் போட்டியிடுவார் என்றும் பேட்டி கொடுத்திருந்தார். முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஊடக விவாதங்களில் அந்த கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்க கூடாது எனவும் அப்படி பங்கேற்று  அவர்கள் சொல்லும் கருத்துகள் அந்த கட்சியின் கருத்து ஆகாது எனவும் ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ள நிலையில் தற்போது புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.