ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூ சண்டிகரில் உள்ள சர்வதேச மைதானத்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ஆரம்பத்திலேயே ஒரு சுவாரசியமான திருப்பம் ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜியாவுர் ரஹ்மான் வீசிய பந்தில், இந்திய அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல் அவுட்டாகி இருக்க வேண்டியது.
பந்து அவரது பேட்டில் பட்டுச் சென்றதை விக்கெட் கீப்பரோ அல்லது மற்ற வீரர்களோ சரியாகக் கவனிக்கவில்லை. நடுவரும் அவுட் தரவில்லை. ஆப்கானிஸ்தான் அணியினர் ராகுலிடம் கேட்க, அவரோ ‘பேட்டில் படவில்லை’ என்பது போல தலையசைத்து அவர்களை நம்ப வைத்தார். ரீப்ளேயில் அது அவுட் என்பது தெளிவாகத் தெரிந்ததை அடுத்து, இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான், “ராகுலின் இந்த நடிப்புக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்” என்று நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
Rahul confused the AFG team and made them believe it was his bat’s sound. Well Played Rahul 👏 https://t.co/enVYHa7AKe pic.twitter.com/OaWR4MrhLu
— Varun (@The_MythBreaker) June 6, 2026
மறுபுறம், அதிரடியாகத் தொடங்கிய மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் முகமது சலீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய இளம் இடதுகை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், ராகுலுடன் ஜோடி சேர்ந்து ஆப்கான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். சுதர்சன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவருடன் இணைந்து கேப்டன் சுப்மன் கில்லும் சதம் விளாச, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்து இமாலய நிலையை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தங்களுக்குக் கிடைத்த கேட்ச் மற்றும் அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டதால், முதல் நாளிலேயே இந்திய அணி இப்போட்டியில் தனது முழு ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது
