ஒரு பெண் பயனர் தனது முகவரிக்கு டெலிவரி செய்த பிளிங்கிட் பணியாளர் தன்னை தகாத முறையில் தொட்டதாகக் கூறி, சம்பவத்துடன் கூடிய சிசிடிவி காட்சிகளை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  “@eternalxflames_” என்ற கணக்கின் வழியாக 3 அக்டோபர் 2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5:30 மணியளவில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் மற்றும் பிளிங்கிட் டெலிவரி பணியாளர் வீட்டின் வெளியே நிற்பது காணப்படுகிறது. ஹெல்மெட் அணிந்த அந்த நபர், தனது பையில் இருந்து பார்சலை எடுத்துப் பெண்மணிக்குக் கொடுக்கும் போது, அவரது மார்பைத் தொட்டதாக காட்சியில் தெரிகிறது. அதனையடுத்து, தன்னை மீண்டும் தொட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பெண் பார்சலால் தனது மார்பை மூட முயன்றதாகவும், தன்னை மொத்தமாக இந்த நிகழ்வு அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் கூறியுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் இன்னும் புகார் அளிக்கவில்லை என்றாலும், பிளிங்கிட் நிறுவனம் தனது தகவலுக்கு உடனடியாக பதிலளித்து, சம்பந்தப்பட்ட டெலிவரி பணியாளரின் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு, அவரை பணியிலிருந்து நீக்கியதாக அந்தப் பெண் பதிவில் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது நகைச்சுவையா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள அந்தப் பெண், “@letsblinkit தயவுசெய்து கடுமையான நடவடிக்கை எடுங்கள்,” என வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.