வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதிக பணிச்சுமை காரணமாகப் பலருக்கும் நினைவாற்றல் குறைபாடு, கவனச்சிதறல் மற்றும் மன மந்தம் போன்ற ‘மூளை மூடுபனி’ பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது ஒரு மருத்துவ நிலை அல்ல என்றாலும், மனச்சோர்வு, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது உடலின் அதிகப்படியான உழைப்பைக் குறிக்கும் அறிகுறியாகும். இதனைத் தவிர்க்க முதலில் உங்களுக்கு நீங்களே அன்பாகவும் நிதானமாகவும் இருக்கப் பழக வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையை அமைத்துக் கொள்வது முடிவெடுப்பதில் ஏற்படும் மனச் சோர்வைக் குறைக்கும். ஆடைகளை முன்கூட்டியே எடுத்து வைப்பது, காலை உணவைத் திட்டமிடுவது போன்ற எளிய பழக்கங்கள் மனதிற்கு ஓய்வளிக்கும். மேலும், அடுத்தடுத்து வேலைகளைச் செய்யாமல், இடையிடையே 5 முதல் 10 நிமிடங்கள் வரை சிறிய ஓய்வு இடைவேளைகளை எடுத்துக்கொள்வது மூளையை மீள்சீரமைக்க உதவும்.

எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முயலாமல், நாட்காட்டிகள் மற்றும் ஸ்மார்ட்போன் நினைவூட்டல்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ‘அடுத்து என்ன செய்வது?’ என்ற தேவையற்ற மன அழுத்தம் குறையும். இதனுடன் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தினமும் 7 முதல் 9 மணி நேர உறக்கம், போதிய தண்ணீர் அருந்துதல், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள் ஆகியவை மிகவும் அவசியமாகும்.

குறிப்பாக முட்டை, மீன், கொட்டைகள் போன்ற கோலின் சத்து நிறைந்த முழுமையான உணவுகளை உட்கொள்வதும், சுவாசப் பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும் மூளையின் கவனத்தைக் கூர்மைப்படுத்தும். இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் மனக் குழப்பங்களை நீக்கி, தெளிவான சிந்தனையோடு அன்றாடப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.