மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தனது ‘ஆதிபுருஷ்’ வசனங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் சுக்லா கூறியுள்ளார்.

ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ், ராமாயணக் கதையின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. இதில் பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்தில் வந்த சில வசனங்கள் ராமாயணத்தை இழிவுபடுத்துவதாக பலரும் விமர்சித்த நிலையில், படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் சுக்லாவுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததால், அவரது வீட்டிற்கு மும்பை போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில், மனோஜ் முண்டாஷிர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ வசனங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ‘ஆதிபுருஷ்’ படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். கூப்பிய கைகளுடன் எனது நிபந்தனையற்ற மன்னிப்பைகோருகிறேன். பஜ்ரங்பலி ஆண்டவர் எங்களை ஒன்றிணைத்து, நமது புனிதமான சனாதனத்திற்கும், நமது உயர்ந்த தேசத்திற்கும் சேவை செய்ய வலிமையை வழங்குவாராக. இவ்வாறு அவர் கூறினார்..

https://twitter.com/manojmuntashir/status/1677504640009781250