மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் வடக்கு தாலுக்காவிற்கு உட்பட்ட தாரே கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவர் தனது மூன்று சிறு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீமா அண்ணா வாக்மாரே (34) என்ற அந்த நபர், ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் கடும் வாக்குவாதம் நிலவி வந்த நிலையில், மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். பலமுறை அழைத்தும் மனைவி வர மறுத்ததால் ஏற்பட்ட விரக்தியில், பீமா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

​தனது குழந்தைகளான ஜான்வி, பிரகதி மற்றும் பாபு ஆகிய மூவரையும் அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தானும் விஷம் அருந்தியுள்ளார். இதில் பீமா வாக்மாரே சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தகவலறிந்த கிராம மக்கள் விரைந்து வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், குடும்பத் தகராறு எதனால் உருவானது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.