அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மாநில திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னையில் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘அமைச்சர் ராஜகண்ணப்பனின் செயல்பாடுக்கான பதிலை அவரது கட்சி தான் சொல்ல வேண்டும். எங்களது கட்சியில் யாரேனும் இவ்வாறு செய்திருந்தால் நாங்கள் பதில் சொல்லியிருப்போம். இது கட்சியின் விதிகளுக்கு முரண்பாடானது’ என்றார்.