அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஹோபோகன் நகரின் மேயராக சீக்கிய மதத்தை சேர்ந்த ரவீந்தர் எஸ் பல்லா என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இது குறித்து மேயர் ரவீந்தர் எஸ் பல்லா கூறுகையில், முதல் கடிதம் மெயில் மூலமாக வந்துள்ளது. அதில் தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

அடுத்ததாக வந்த இரண்டாவது கடிதத்தில் தான் சீக்கிய மதத்தை பின்பற்றுவதால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவதாக வந்த மிரட்டல் கடிதம் தான் என்னை மிகவும் அச்சுறுத்தியது. அதில் இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை என்றும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விடுவோம் என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீண்டும் 2021 இல் வெற்றி பெற்று மேயரானார்.