தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் உரிமைத் தொகை கிடைக்காமல் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடந்த மாதத்தை போல ஒரு நாளைக்கு முன்பாக அக்டோபர் 14ஆம் தேதி அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கும் இந்த மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.