தமிழக இந்துசமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவரான  இவர், அமைச்சரான  பிறகு  தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுவரை 1,000 கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்துள்ளதாகவும், 3000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பெருமிதத்துடன் குறிப்பிடும் அளவுக்கான  பல பெருமைக்குரிய செயல்களுக்கு சொந்தக்காரர்.

இந்நிலையில் புகழபெற்ற திருக்கடையூர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது. நேற்று (அக்.,07) தனது 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கோவிலுக்கு வந்த சேகர்பாபு, அவரது மனைவி சாந்தியுடன் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார். அத்துடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க அமைச்சர் அவரது மனைவிக்கு மாங்கல்யம் அணிவித்தார்.