கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாதவலாயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதனால் குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது. ஆகவே அதனை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதி இன்றி இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது. மேலும் கோவில் திருவிழாக்களை தவிர்த்து கிராமபுறப் பகுதிகளில் அனுமதியின்றி இறைச்சி கடை நடத்தவோ, கால்நடைகளை வெட்டவோ அனுமதி இல்லை என கூறினர்.

இதற்கிடையில் விசாரித்ததில் சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடை நபர் கோழி இறைச்சிக் கடை நடத்த மட்டுமே அனுமதி வைத்திருந்தார் என்றும் அதனால் அவர் மாட்டிறைச்சி நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். அதன்பின் உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.