நேபாளத்தின் பியூதான் (Pyuthan) பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அரங்கேறிய விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இப்போது உலகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பள்ளியின் நிர்வாகம், பள்ளி வளாகத்தின் நடுவில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் மாணவர்களுக்கான கேண்டீன் (உணவகம்) கட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்தப் பழமையான மரத்தை வெட்டிச் சாய்த்துள்ளனர். ஆனால், மரம் வெட்டப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே பள்ளி வளாகத்திற்குள் யாரும் எதிர்பார்க்காத ஒரு கொடூரம் அரங்கேறியது.

அங்கே படித்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள் திடீரென அலறித் துடிக்கத் தொடங்கினர். சில மாணவர்கள் அப்படியே மயங்கி விழ, இன்னும் சிலரோ கத்தி அழுதுகொண்டே விசித்திரமாக உடம்பை வளைத்து நடுங்கத் தொடங்கினர். ​மாணவர்களின் இந்த திடீர் விசித்திர நடத்தையைக் கண்டு ஒட்டுமொத்த பள்ளியும், பெற்றோர்களும் மரண பயத்தில் உறைந்து போயினர். அந்தப் பகுதி மக்கள், வெட்டப்பட்ட மரத்தில் இருந்த கோபமடைந்த ஆவிகள் தான் மாணவர்களை இப்படி ஆட்டிப்படைப்பதாகக் கூறி பயத்தைக் கிளப்பினர்.

ஆனால், உடனடியாக பள்ளிக்கு விரைந்த மருத்துவர்கள் மாணவர்களைத் தீவிரமாகப் பரிசோதித்தனர். இறுதியாக, இது ஆவிகளின் நடமாட்டமோ அல்லது பேய் பிடிப்பதோ அல்ல, மாறாக இது ‘கூட்டு மனநோய் பாதிப்பு’ (Mass Psychogenic Illness / Mass Hysteria) என்ற தீவிரமான உளவியல் பிரச்சனை தான் என்று மருத்துவர்கள் ஆணித்தரமாக விளக்கியுள்ளனர். இந்த சம்பவம் பியூதான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.