விஞ்ஞானிகள், கடலின் ஆழத்தில் காணப்படும் சில பாக்டீரியாக்கள் மனிதர்களால் கடலில் விடப்பட்ட PET பிளாஸ்டிக்கை (பாட்டில்கள் போன்றவை) சிதைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியாக்கள், PETase என்ற சிறப்பு நொதியை உற்பத்தி செய்கின்றன. இது, இயற்கையாகக் கடலில் உள்ளவற்றைச் சிதைக்கப் பழகிய நொதிகள், பிளாஸ்டிக்கை உண்ணும் வகையில் தகவமைத்துக் கொண்டதைக் காட்டுகிறது.
இந்த PETase நொதியின் செயல்பாட்டிற்கு ‘M5 மோட்டிஃப்’ என்ற அமைப்பு முக்கிய காரணமாக உள்ளது. இந்த சிறப்பு அம்சம் உள்ள பாக்டீரியாக்கள், உலகம் முழுவதும் உள்ள கடல் மாதிரிகளில் (400ல் 80%) கண்டறியப்பட்டுள்ளன. இவை, ஆழமான, உணவுப் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலும் வாழ்கின்றன. அங்கே, பிளாஸ்டிக் இவற்றுக்கு ஒரு முக்கியமான உணவு மூலமாக அமைகிறது.
இந்த பாக்டீரியாக்களின் தகவமைப்புத் திறன் ஆச்சரியமூட்டினாலும், விஞ்ஞானிகள் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள். ஆனாலும், இந்த ஆழ்கடல் நொதிகளைப் பயன்படுத்தி, நிலப்பரப்பில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான வேகமான மற்றும் திறமையான புதிய முறைகளைக் கண்டறிய இது வழிவகுக்கும்.
