தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுப்ரியா. இவர் கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு நடிகை பானுப்ரியா ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அபிநயா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீப காலமாகவே படங்களில் நடிக்காமல் இருக்கும் பானுப்பிரியா தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் என்னுடைய நினைவாற்றல் அதிலிருந்து குறைந்துவிட்டது.

படப்பிடிப்புக்கு சென்றாலும் டயலாக்கை மறந்து விடுகிறேன். எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் மனம் வெறுமையாகி விட்டது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அதோடு என்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக வந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. அவர் தற்போது இல்லாத நிலையில் அதை பற்றி பேசுவதற்கு நான் விரும்பவில்லை. மேலும் என்னுடைய மகள் தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.