ஒடிசாவின் கியோன்ஜர் மாவட்டம் பன்ஸ்பால் தொகுதிக்கு உட்பட்ட அஞ்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில்  வியாழக்கிழமை நடந்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2-ம் வகுப்பு மாணவியான ஜோதிஸ்னா டெஹுரி, வகுப்பறையில் உறங்கியதை கவனிக்காமல் ஊழியர்கள் வகுப்பறையை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். இதையடுத்து மாலை 4 மணி ஆகியும், சிறுமி வீடு திரும்பாததை கவனித்த பெற்றோர்கள் இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுமி ஜன்னல் கம்பிகளைத் தாண்டி வெளியே வர முயன்றபோது, தலை கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. அந்த நிலையில் முழு இரவும் அவள் காயங்களுடன் போராடி கழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மறுநாள்  காலை 9 மணியளவில் பள்ளி சமையல்காரர் பூட்டைத் திறந்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது.

உடனடியாக கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஜன்னலின் இரும்புக் கம்பிகளை வளைத்து சிறுமியை மீட்டனர். பின்னர்  மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது மாணவி நலமாக இருப்பதாக பள்ளி  கல்வித் துறை தெரிவித்துள்ளது.

“>

 

இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளியின் பொறுப்பதிகாரி தலைமை ஆசிரியர் கவுரஹரி மஹந்தா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு மீறல் தொடர்பாக மேல்மட்ட  விசாரணை நடைபெற்று வருகிறது.