சமூக வலைதளங்களில் மனிதநேயத்தையும், தாய்மையின் பாசத்தையும் உணர்த்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. தண்ணீர் நிரம்பிய குட்டை ஒன்றில் சில எருமைகள் நின்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஒரு சிறிய எருமைக்குட்டி அங்கிருந்த பெரிய எருமை ஒன்றின் கொம்புகளுக்கு இடையே மாட்டிக்கொண்டது. கொம்பில் சிக்கிய தனது குட்டியை விடுவிக்க அந்த எருமை எவ்வளவோ முயன்றும், குட்டியால் வெளியே வர முடியவில்லை. இதனால் குட்டி உயிருக்குப் போராடியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

அந்தச் சமயத்தில், அங்கிருந்த நபர் ஒருவர் மிகுந்த தைரியத்துடனும் சாதுரியத்துடனும் எருமையின் அருகே சென்றார். அந்த நபர் தங்களுக்கு உதவத்தான் வருகிறார் என்பதை உணர்ந்தது போல, அந்த எருமையும் அமைதி காத்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்ட அந்த நபர், எருமையின் கொம்புகளுக்கு இடையே சிக்கியிருந்த குட்டியைப் பத்திரமாக மீட்டார். அருகில் இருந்த மற்றொருவர் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்ய, அது தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. “விலங்குகள் கூட அந்த நபர் தங்களுக்கு உதவத்தான் வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டன” என்றும், “எருமை தன்னைத் தாக்காது என்பதை அறிந்து அந்த நபர் துணிச்சலாகச் செயல்பட்டுள்ளார்” என்றும் நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.