சமூக வலைதளங்களில் ஒரு பள்ளியின் அவல நிலையை மாற்றியமைத்த இளைஞர்களின் வீடியோ தற்போது பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வீடியோவின் ஆரம்பத்தில், பள்ளிக் குழந்தைகள் மிகவும் அசுத்தமான இடத்தில், சேறும் சகதியுமாக இருந்த உடைந்த குழாய்களில் தண்ணீர் குடிக்கும் காட்சிகள் மனதை உலுக்கும் வகையில் உள்ளது. சுவர்களில் பாசி படிந்து, தரை முழுவதும் உடைந்த நிலையில், நோய்கள் பரவும் அபாயத்தில் குழந்தைகள் தாகம் தணித்து வந்தனர். ஆனால், சில இன்ஃப்ளூயன்சர்கள் அங்கு நுழைந்தவுடன் அந்த இடத்தின் தோற்றமே தலைகீழாக மாறியது.

​தங்கள் கைகளாலேயே மண்வெட்டி எடுத்துச் சேற்றை அகற்றிய அந்த இளைஞர்கள், சுவர்களில் இருந்த அசுத்தத்தைச் சுரண்டி எடுத்துப் புதுப் பொலிவுடன் வர்ணம் பூசினர். பழைய உடைந்த குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குழாய்களைப் பொருத்தி மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்தனர். “அரசு செய்ய வேண்டிய வேலையை இன்று இன்ஃப்ளூயன்சர்கள் செய்து வருகிறார்கள்” என்ற வாசகத்துடன் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளது. எந்தப் பிரதிபலனும் பாராமல் அந்த இளைஞர்கள் செய்த இந்தச் செயல், சமூக வலைதளங்களின் நேர்மறையான பக்கத்தை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.