இந்தியாவின் டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில், மைதானத்தின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt) முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் விளையாட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா ஓபன் தொடர் இம்முறை இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இதே மைதானத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக மியா குற்றம் சாட்டியுள்ளார்.

“மைதானம் மிகவும் அழுக்காக இருக்கிறது; பறவைகள் மைதானத்திற்குள்ளேயே பறப்பதோடு, கோர்ட்டிலேயே எச்சம் இடுகின்றன. இது வீரர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கடும் குளிரின் காரணமாக வீரர்கள் பல அடுக்குகளாக ஆடைகளை அணிய வேண்டியுள்ளதாகவும், இது போன்ற சூழலில் விளையாடுவது காயங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.