தமிழக அரசியலில் தவெக-வின் வருகை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் திமுக-விலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த அவர், திமுக-வை விளாசித் தள்ளியுள்ளார். இத்தனை ஆண்டுகள் திமுக-வில் உழைத்த தனக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்பதே தனது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
"தி.மு.கவில் உழைத்ததற்கு எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.. அதனால் இங்கே நேர்மையான ஆட்சியில் நானும் பணியாற்ற வந்துள்ளேன்"..
தி.மு.கவில் இருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.கவில் இணைந்த பின் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் பேட்டி#Erode |… pic.twitter.com/1RG8JKucGu
— Polimer News (@polimernews) May 15, 2026
நேர்மையான ஆட்சியை வழங்கத் துடிக்கும் தவெக-வில் இணைந்து பணியாற்றவே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். திமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் இப்படித் தாவத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” என்று கேள்வி எழுப்பிய சண்முகசுந்தரம், இனி தனது அரசியல் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தோடு தான் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
