கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அறிவிப்புகள் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்திய 4 சதவீத அதிகரிப்புடன் சேர்ந்து இனி 35 சதவீதம் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.