கர்நாடக மாநிலம் சாமராநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குள் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சந்தேகத்திற்குரிய வேட்டையாடுபவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹனூர் தாலுகா தொமையார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டனிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூவரும் ஹோலட்டி வனப்பகுதியில் வைத்து வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டவிரோத விலங்கு வேட்டையைத் தடுத்தபோது நடந்த மோதலில் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலி என்கவுன்டர் என்று குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், ஹனூர் வனத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“>

 

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அப்பகுதியில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.