மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணைக்காக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் அளித்த சாட்சியம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பில்கேட்ஸ் தனது திருமண வாழ்க்கையில் மூன்று பெண்களுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மிலா அன்டோனோவா, கரிமா நிகமத்துலினா மற்றும் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசெல்ரோட் ஆகியோருடனான இந்த உறவுகள் பற்றி எப்ஸ்டீனுக்குத் தெரிந்திருந்ததாகவும், இதைப் பயன்படுத்தி தன்னை மிரட்டவோ அல்லது தன் மீது அழுத்தம் கொடுக்கவோ அவர் முயற்சித்திருக்கலாம் என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
இருப்பினும், எப்ஸ்டீன் தன்னிடம் நேரடியாகப் பணம் கேட்டு மிரட்டவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எப்ஸ்டீன் உடனான தனது தொடர்புகளை ஒரு தவறு என்று குறிப்பிட்ட பில்கேட்ஸ், அவரோடு தாம் பரோபகாரம் மற்றும் அறக்கட்டளை பணிகள் குறித்து விவாதிக்கவே சுமார் 12 முதல் 14 முறை சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
எப்ஸ்டீனின் குற்றச் செயல்களில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை எப்ஸ்டீன் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸ் அறக்கட்டளை, எப்ஸ்டீன் உடனான கடந்தகாலத் தொடர்புகள் குறித்துத் தற்போது வெளிப்புற ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள கூடுதல் ஆவணங்கள், பல முக்கியப் புள்ளிகளைச் சுற்றி உலகளாவிய கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
