சென்னை கிழக்கு தாம்பரம் எம்ஜிஆர் தெருவில் அன்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு அன்புக்கு திருமணம் நடைபெற்றது. அவருக்கு 5 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அன்புவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அன்புவின் மனைவி குழந்தைகளுடன் அவர்கள் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அன்பு தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
குழந்தைகளை பார்க்க வேண்டும் என தொடர்ந்து மனைவியிடம் கூறியுள்ளார். எதற்குமே அன்புவின் மனைவி சம்மதிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் இரவு பொத்தேரி- கூடுவாஞ்சேரி இடையே ரயில் தண்டவாளத்தில் அன்பு நடந்து சென்றுள்ளார். அவர் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசி கொண்டே நடந்து சென்றார். அப்போது நான் வீட்டிற்கு வர மாட்டேன். குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள் என தனது தாயிடம் கூறியுள்ளார்.
மேலும் தனது குழந்தைகளிடம் பாட்டிக்கு கீழ் படிந்து நன்றாக படித்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சற்று நேரத்தில் எதிரே வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வீடியோ காலில் இருந்த அன்புவின் தாய் அலறல் சத்தம் கேட்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்புவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.