தெலுங்கானா மாநிலம் சிரிசில்லா பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் உதய். இவர் யூடியூபில் வரும் வீடியோக்களை பார்த்து அதே போன்று இமிடேட் செய்வதை பழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு மொபைல் பார்த்துக் கொண்டே ரூமுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார் உதய். பெற்றோர் அழைத்தும் உதய் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. அவருக்கு போன் செய்து பார்த்த போதும் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் உதய் இருந்துள்ளார். உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் அவரை வீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உதய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். youtube இல் ஏதேனும் வீடியோவை பார்த்து அதை செய்ய முயற்சித்து இதுபோன்று நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.