
பீகார் மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள மஞ்சுநாத் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததோடு ஒரு கடிதத்தில் தனது மனைவி சுமத்திய வரதட்சனை கொடுமை உள்ளிட்ட குற்றசாட்டுகள் எதுவும் உண்மை அல்ல எனவும், தனது பெற்றோரை தயவு செய்து துன்புறுத்த வேண்டாம் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு திருமண வரம் தேடும் இணையதளம் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அடுத்த ஆண்டே இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதன் பிறகு சுபாஷிடம் அவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் 2021 ஆம் ஆண்டு அவரது மகனை அழைத்துக் கொண்டு சுபாஷின் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளார். இது தொடர்பாக அவர் கடைசியாக பதிவு செய்த வீடியோ மற்றும் கடிதத்தில் பல சம்பவங்களை குறிப்பிட்டு இருந்தார்.
குறிப்பாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மனைவியை கொடுமை செய்ததால் தனது மாமனார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் தன் மாமனாருக்கு ஏற்கனவே 10 ஆண்டுகளாக இருதய பாதிப்பு இருந்துள்ளதாகவும், சுபாஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மாமியார் மற்றும் மனைவி “நீ ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை” என்று கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதில் நான் தற்கொலை செய்து கொண்டால் உங்களுக்கு யார் பணம் தருவார்கள் என்று சுபாஷ் கேட்டதற்கு உனக்கு பிறகு உன் தந்தையும், உன் பெற்றோரும் தருவர் என்று கூறியுள்ளனர்.
உன் பெற்றோர் இறந்த பிறகு உன் மனைவிக்கு எல்லா பணமும் வந்து சேர்ந்துவிடும் என்று தனது மாமியார் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். தனது மகனை சந்திக்கவும் மனைவியின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் என்னிடம் உள்ள பணத்தை புடுங்க போகிறார்கள். அதற்கு நீதித்துறை அமைப்பும் உறுதுணையாக இருக்கின்றது. நான் சென்ற பிறகு பணமும் இருக்காது, என் பெற்றோரை துன்புறுத்துவதற்கான காரணமும் இருக்காது. எனது உடலை அழித்து அனைத்தையும் நான் காப்பாற்றுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். அது மட்டுமின்றி தனது வீடியோ பதிவை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவேற்றி அதனை டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருடன் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.