சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார் டிரைவரான மணிகண்டனுக்கு ஷோபனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் செனாய் நகரில் இருக்கும் ஷோபனாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்காக வந்துள்ளனர். நேற்று முன்தினம் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் புல்லா அவென்யூ அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மணிகண்டன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.