சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் அம்பாள் நகர் பாரதியார் தெருவில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதள மூலம் அறிமுகமான சண்முகப்பிரியா என்ற பெண்ணை முனுசாமி காதலித்து வந்தார். இதனை அறிந்த இரு வீட்டாரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சண்முகப்பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சண்முகப்பிரியா மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பியில் விழுந்ததால் மின்சாரம் தாக்கி சண்முகப்பிரியா கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சண்முகப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.