தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ரமேஷ் வாட்ஸ் அப் மூலம் எனது மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மஞ்சு கணவரை பார்ப்பதற்க்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாமியார் செல்லம்மாளுக்கும், மஞ்சுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செல்லம்மாள் உறவினர்களான முத்தையன், அம்சா ஆகியோருடன் இணைந்து மஞ்சுவை அடித்து உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மஞ்சு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான செல்லம்மாள் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.