காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை சூர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சூர்யாவிற்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திக் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று இருவரும் ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கார்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டார். பின்னர் கார்த்தி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் சூர்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.