தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பகுதியில் யஸ்வின்(20) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யஸ்வினுக்கும் அவரது நண்பரான சந்துருவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு யஸ்வினிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.

அதன் பிறகு அந்த பணத்தை கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. நேற்று பென்னாகரம் சாலையில் சந்தித்த நண்பர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சந்துரு யஸ்வினை கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த யஸ்வின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்துருவை கைது செய்தனர்.