சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு சொத்துரிமை அமலாக்க பிரிவிற்கு புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் படி கூடுதல் காவல் துறை இயக்குனருக்கு அமலாக்க பணியகம் உடனடியாக சோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்படி காவல்துறையினர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், சென்னை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு ஹேமலதா என்பவரை கைது செய்த அவர்கள், வீட்டில் இருந்த 750 எல்ஜி அட்டை , 15 எல்ஜி ஸ்டிக்கர் ரோல், பேக்கிங் பொருள், 40 கிலோ அரபு பசை தூள், 100 எல்ஜி பெட்டி மூடி போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு 34 ஆயிரத்து 250 ரூபாய் என்று சென்னை அமலாக்க பணியகம் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சிகரெட் பிராண்டுகளை போலியாக தயாரித்து வெளியில் விற்பனை செய்து வருவதாக திண்டுக்கல் அறிவு சார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் முருகன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் படி அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது அபுதாஹிர் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து lights, kings (big) 2180 பாக்கெட்டுகள், gold flake honey dew, honey dew (small) ,gold flake (filter) போன்ற பல வகையான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.6.80 லட்சம் என்று சென்னை அமலாக்க பணியகம் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.