கனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள டிம் ஹார்டன்ஸ் காபி கடையில், மது போதையில் ஒருவர் இந்திய நபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, குடியேற்ற மக்களிடம் அதிகரித்து வரும் இனவெறி குறித்து கவலை எழுந்துள்ளது.

 

வீடியோவில், டொரொண்டோ ப்ளூ ஜெய்ஸ் ஜாக்கெட் அணிந்திருந்த கனடிய நபர், “நீ என்னை விட மேலாக நடந்து கொள்கிறாய்” என்று கூறி, இந்திய நபருடன் தகராறில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சியில் அவர் தன் கைப்பேசியை எறிந்து, பின்னர் அந்த இந்திய நபரிடம் தள்ளுமுள்ளு செய்தார். பணியாளர் ஒருவர் இடையீடு செய்து இருவரையும் அமைதிப்படுத்த முயன்றபோதும், மது போதையில் இருந்த நபர் தொடர்ந்து ஆவேசமாக நடந்துகொண்டார்.

இந்தச் சம்பவம், அண்மையில் எட்மன்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் அர்வி சிங் சாகு தாக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து நடந்துள்ளது. கார் மீது சிறுநீர் கழித்த நபரை எதிர்கொண்டபோது, அவர் தாக்கியதில் சாகு மயக்கமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட கைல் பாப்பின் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக எட்மன்டன் போலீசார் தெரிவித்தனர்.