கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அதே சமயம் அங்கு பல்வேறு பகுதியில் தொடர் மின்வெட்டுகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதி அடைகின்றனர். தொடர் மின்வெட்டு காரணமாக மின்துறை ஊழியர்கள் முறையான பதில் கொடுக்கவில்லை எனவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அங்கு வசித்து வரும் ஜெயந்தி குஷ்வாஹா என்ற பெண் தனது 10, 14 மற்றும் 16 வயதுடைய 3 குழந்தைகளுடன் ஒரு ஏடிஎம் மையத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார். இவர்களுடன் மற்றொரு பெண்ணும் அந்த ஏடிஎம் மையத்தில் ஓய்வு எடுக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இது குறித்து பெண் கூறியதாவது, நாங்கள் எங்கே செல்வது குறைந்தபட்சம் இங்கே மின்சாரம் இருப்பதால் நாங்கள் இங்கே இருக்கிறோம். இரவு பகல் என எப்பொழுதும் எங்களுக்கு மின்சாரம் இல்லை எனவே நான் என் முழு குடும்பத்துடன் வெப்பத்திலிருந்து சிறிது ஓய்வு பெற இங்கே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.