பெற்ற தாயின் மருத்துவச் செலவுக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் காப்பீட்டு நிறுவனத்திடம் நம்பி ஒப்படைத்த மகனுக்கு, லக்னோவில் நேர்ந்த அனுபவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது தாய்க்காக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டி வந்த அந்த இளைஞர், அவசரத் தேவைக்காக லக்னோவில் உள்ள ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகத்திற்குச் சென்று உதவி கேட்டுள்ளார்.

ஆனால், அங்குள்ள ஊழியர்கள் அவருக்கு முறையான பதில் அளிக்காமல் பல மணி நேரம் காக்க வைத்ததோடு, “எங்களிடம் கேட்டுக்கொண்டா பாலிசி எடுத்தீர்கள்?” என்று ஏளனமாகப் பதில் கூறி பணத்தைத் தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தனது குமுறலை வீடியோவாகப் பதிவிட்டு, “இன்சூரன்ஸ் நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்” என மக்களிடம் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ஆவணங்களில் குளறுபடி இருந்தால் மட்டுமே க்ளைம் மறுக்கப்படும் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட இளைஞரின் நிலையைப் பார்த்த நெட்டிசன்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.