நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

உலகம் முழுவதும் முதல் 6 நாட்கள் முடிவில் பதான் படம் ரூபாய். 591 கோடி வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் ரூ. 367 கோடியும், வெளி நாடுகளில் ரூ. 224 கோடியும் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஆம் வார முடிவிலேயே ரூபாய்.1,000 கோடி வசூலை கடந்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது “பதான் பார்த்த ரசிகர்களுக்கும் வெற்றிபெற செய்தவர்களுக்கும் நன்றியுடன் உள்ளோம்.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகும். அதனை தாண்டி யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனது முந்தைய படங்களின் தோல்வியால் வேறு தொழிலுக்கு சென்று விடலாமா என நினைத்துக்கொண்டிருந்தேன். உணவக தொழில் செய்யலாம் என சமையல் கூட கற்றுக் கொண்டேன். எனினும் பதானின் வெற்றி என்னை காப்பாற்றி இருக்கிறது. டைரக்டர் சித்தார்த் ஆனந்த் பதான்-2 பாகத்தை எடுக்க விரும்பினால் அதில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் எனத் தெரிவித்து உள்ளார்.