சனவரி 2 கிரிகோரியன் ஆண்டின் இரண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 (நெட்டாண்டுகளில் 364) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

366 – அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர்.

533 – மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

1492 – எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது.

1757 – கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.

1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையில் இட்ரென்டன் அருகே நடந்த சமரில் பிரித்தானியப் படைகளை பின்வாங்கச் செய்தன.

1782 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.

1788 – ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 4வது மாநிலமாக இணைந்தது.

1791 – வடமேற்கு இந்தியப் போர்: ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் படுகொலை செய்தனர்.

1793 – உருசியாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.

1818 – பிரித்தானியக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் நிறுவப்பட்டது.

1893 – வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1905 – உருசிய-சப்பானியப் போர்: உருசியக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் சப்பானியரிடம் சரணடைந்தனர்.

1920 – ஐக்கிய அமெரிக்காவின் பல நகரங்களில் 6,000 இற்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.

1921 – எசுப்பானியாவின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: மணிலா சப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் நியூரம்பெர்க் நகரத்தின் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.

1954 – பத்மசிறீ, பத்மபூசண், பத்மவிபூசன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.

1955 – பனாமாவின் அரசுத்தலைவர் ஒசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.

1959 – சந்திரனை நோக்கிய முதலாவது விண்கலம் லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1963 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது.

1971 – கிளாஸ்கோவில் காற்பந்தாட்ட அரங்கு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் உயிரிழந்தனர்.

1974 – ஓப்பெக் தடையை அடுத்து, பெட்ரோல் சேமிப்புக்காக, வாகனங்களுக்கான 55 மை/மணி என்ற உச்ச வேகத்தை அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.

1975 – பீகார், சமஸ்திபூர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ரெயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிசுரா படுகாயமடைந்தார்.

1976 – தெற்கு வடகடல் கரைகளில் பலத்த காற்று வீசியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழந்தனர்.

1978 – பாக்கித்தான், முல்தான் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1982 – சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.

1992 – சியார்சியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் சிவியாத் கம்சக்கூர்தியா பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

1993 – யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை: கிளாலி நீரேரியில் 35-100 பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1999 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.

2004 – ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.

2006 – திருகோணமலை மாணவர்கள் படுகொலை: இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 – மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

2008 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

இன்றைய தின பிறப்புகள்

1873 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1897)

1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி

1914 – நூர் இனாயத் கான், உருசிய-ஆங்கிலேய உளவாளி (இ. 1944)

1920 – ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (இ. 1992)

1920 – ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (இ. 2013)

1935 – க. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி

1940 – எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்

1940 – அ. சண்முகதாஸ், இலங்கை கல்வியாளர், தமிழறிஞர்

1943 – ஜேனட் அக்கியூழ்சு மத்தேய், துருக்கிய-அமெரிக்க வானியலாளர் (இ. 2004)

1943 – பாரிசு மான்கோ, துருக்கிய பாடகர், தயாரிப்பாளர் (இ. 1999)

1960 – ராமன் லம்பா, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1998)

1961 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் தளபதி (இ. 1993)

1964 – ருமேஸ் ரத்னாயக்க, இலங்கைத் துடுப்பாளர்

இன்றைய தின இறப்புகள்

1782 – கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் – கண்டியின் கடைசி அரசன்.

1892 – ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1801)

1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)

1960 – சி. ஆர். நாராயண் ராவ், இந்திய விலங்கியல் மருத்துவர், ஊர்வனவியலாளர் (பி. 1882)

1984 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (பி. 1906)

1988 – வரதராஜன் முதலியார், இந்தியக் கொள்ளை, கடத்தல் காரர் (பி. 1926)

1989 – சப்தர் ஆசுமி, இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1954)

2012 – கே. ஜே. சரசா, தமிழ்நாட்டின் பரத நாட்டிய ஆசிரியை, முதலாவது பெண் நட்டுவனார்

2013 – கெர்டா லெர்னர், ஆத்திரிய-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1920)

2016 – அ. பூ. பர்தன், இந்திய அரசியல்வாதி (பி. 1924)

இன்றைய தின சிறப்பு நாள்

மூதாதையர் நாள் (எயிட்டி)

படைத்துறையினரின் வெற்றி நாள் (கியூபா)