
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பலராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஸ்ரீது. இவர்களுக்கு தேவேந்து(2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வீட்டை சுற்றி அனைத்து இடங்களிலும், அக்கம் பக்கங்களிலும் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அவர்களது வீட்டின் கிணற்றில் சிறுவன் உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை பணியாளர்களால் சிறுவனின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிணற்றை சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருப்பதால் 2 வயது சிறுவன் கிணற்றின் உள் விழுந்தது எப்படி? என சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர். எனவே இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் மற்றும் மாமாவிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.