சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய ருத்ரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரண் ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பாச்சேத்திக்கு சென்று கொண்டிருந்தார். தட்டான்குளம் அருகே சென்றபோது பின்னால் வந்த வாகன ஓட்டுநர் ஹாரன் அடித்தார். இதனால் சரண்ராஜ் இருசக்கர வாகனத்தை இடது புறமாக திருப்பினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் முன்னால் பஞ்சர் ஆகி நின்ற மற்றொரு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரண்ராஜ், அபிராமி, ருத்ரேஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.